2026-ம் ஆண்டு பற்றி பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புகள்
1 min read
Baba Vanga’s frightening predictions for 2026
3.1.2026
ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்கும்போது சில பெயர்கள் அதிகளவில் உச்சரிக்கப்படும். அத்தகைய பெயர்களில் ஒன்றுதான் பாபா வாங்கா. புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன கூறியுள்ளார் என்ற தகவல்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பேசுபொருளாகும்.
அதன்படி 2026ம் ஆண்டு குறித்து அவர் தெரிவித்த கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றன. பாபா வாங்கா என்பவர் யார் என்றே தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். பல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்த ஒரு தீர்க்கதரிசிதான் பாபா வாங்கா. சிறு வயதிலேயே பார்வையை இழந்த இவர், தனது உள்ளுணர்வின் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ளவற்றை முன்னரே கணித்து கூறியதன் மூலம் கவனம் பெற்றார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது போன்றவற்றை இவர் முன்னரே கணித்து கூறியிருந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டுகூட ஜப்பானில் ஏற்பட்ட மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை அவர் முன்னரே கணித்திருந்தார்.
இந்தச் சூழலில், 2026ம் ஆண்டுகுறித்த அவரது கணிப்புகள் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. 2026ம் ஆண்டு ரஷிய அதிபர் புதினின் வீழ்ச்சி தொடங்கும் எனப் பாபா வங்கா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாகப் புதின், ரஷியாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள், ஆட்சி கவிழ்ப்புகள், அரசியல் படுகொலைகள் எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனாலும், ரஷிய அதிபர் மட்டும் மாறவில்லை.
இந்தச் சூழலில், இந்த ஆண்டு ரஷியாவில் புதிய தலைவர் ஒருவரின் எழுச்சி இருக்கும் எனப் பாபா வங்கா கணித்துள்ளார். இதன்மூலம் புதினின் ஆட்சி முடிவுக்கு வரக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். அதேபோல, உலக நாடுகளிடையே கடுமையான போர் மூளும் எனக் கூறப்படுகிறது. தைவானை சீனா கைப்பற்ற சாத்தியம் உள்ளதாகவும், ரஷியா- அமெரிக்கா இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக உலகளாவிய போர் உருவாகலாம் என பாபா வங்கா கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது 3ம் உலகப்போராக இருக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் மனித குலம் மீது ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்த தொடங்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், நவம்பர் மாதம் பூமியின் வளிமண்டலத்திற்கு விண்கலம் ஒன்று வந்து சேரும். அதன் மூலம் வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் தொடர்புகொள்வார்கள் எனவும் அவரது கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு இயற்கை சீற்றங்களால் பூமியின் 8 சதவீத பகுதி பாதிக்கப்படும் எனப் பாபா வங்கா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பங்குச்சந்தைகள் சரிவு, நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவை ஏற்படும் எனவும், அதன் மூலம் தங்கத்தின் விலை மேலும் புதிய உச்சத்தை அடையும் எனவும் பாபா வங்காவின் கணிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2026ம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் இந்த கணிப்புகளில் பெரும்பாலானவை எதிர்மறையாகவே உள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் நிகழும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பாபா வங்காவின் கணிப்பில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.