இந்தியாவில் ஓராண்டில் தனிமனிதன் ஏற்படுத்தும் உணவுக் கழிவுகள் 55 கிலோ
1 min read
In India, the average person generates 55 kg of food waste per year.
3.1.2026
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யு.என்.இ.பி.) சமீபத்திய அறிக்கையில், உலகில் தனிமனிதர்களால் ஓராண்டில் ஏற்படுத்தப்படும் உணவுக் கழிவுகள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு இருக்கின்றன? என்ற புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இது இந்தியாவில் ஓராண்டில் மட்டும் தனிநபர் மூலம் 55 கிலோ உணவுக் கழிவுகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை சமைத்த உணவு, காய்கறித் தோல்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட அறிக்கை ஆகும். இந்த பட்டியலில் குறைந்த அளவில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், ரஷியா இருக்கிறது. ரஷியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 33 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், தனிநபர் அதிகமாக ஓராண்டில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், மாலத்தீவு (தனிநபர் 207 கிலோ) உள்ளது. அதற்கடுத்தபடியாக, எகிப்து (163 கி.கி.), ஈராக் (143 கிலோ), பாகிஸ்தான் (130 கிலோ), மெக்சிகோ (105 கிலோ), சவுதிஅரேபியா (105 கிலோ), ஆஸ்திரேலியா (98 கிலோ), தென்கொரியா (95 கிலோ), பிரேசில் (94 கிலோ) உள்ளிட்ட நாடுகள் வருகின்றன.
ஐ.நா. உருவாக்கியிருக்கும் இந்த புள்ளி விவரங்களில் வெறும் உணவுக் கழிவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், காகிதம், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் பிற கழிவுகளையும் சேர்த்தால், இந்த அளவு இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதன்படி, பார்க்கும் போது, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 0.35 கிலோ முதல் 0.6 கிலோ வரை என எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு சுமார் 125 கிலோ முதல் 200 கிலோ வரை மொத்த கழிவுகள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பழைய செல்போன், வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என ஆண்டுக்கு சுமார் 2 கிலோ வரை மின் கழிவுகளை உருவாக்குகின்றனர் என்ற மற்றொரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உணவுக்கழிவோ, எலெக்ட்ரானிக் கழிவோ எதுவாக இருந்தாலும் அவற்றை மறுசுழற்சி செய்தால் மனித குலத்துக்கு பயன் தரும்.