June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

” எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை ஒழிப்போம்”-அமித்ஷா பேச்சு

1 min read

“We will abolish the DMK regime at any cost” – Amit Shah’s speech

4.1.2026
”எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை ஒழிப்போம். முடிவு கட்டுவோம்,” என புதுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பயணத்தின் நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடந்தது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டாமா? பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டாமா? மாபெரும் மகத்தான தமிழ் மொழில் உரையாற்ற முடியவில்லை என மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் புனிதமான மண்ணுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே மாபெரும் சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியில் உரையை துவக்குகிறேன்.

2026 ஏப்.,26 ம் தேதி இங்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும். வரும் நாட்களில் பாஜக- அதிமுக இன்னும் சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம். எப்பாடு பட்டாவது திமுக ஆட்சியை ஒழிப்போம். முடிவு கட்டியே தீருவோம்.

ஒட்டு மொத்த பாரதத்திலும் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்றால் திமுக தான். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதியை நிறைவேற்றிய கட்சி என்றால் அது திமுக ஆட்சி தான்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் மகன் உதயநிதியை முதல்வராக்குவது மட்டுமே அவர்களின் நோக்கம். ஒரே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.ஸ்டாலின் கனவு நிறைவேறாது.

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி. 1998 நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். 2019ம் ஆண்டு தேர்தலிலும் நாம் ஒன்றாக களம் கண்டோம். 2021ம் ஆண்டு தேர்தலிலும் கூட இணைந்து தேர்தலை சந்தித்தோம். நாம் 2024 ல் தனியாக தேர்தலை சந்தித்தாலும் என்றாலும் அதிமுக பாஜக மொத்த ஓட்டுகளை எண்ணி பார்த்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம்.

தேஜ அரசு, தமிழுக்கு எதிரானது என ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என முதல்முறையாக தேஜ கூட்டணி அரசு தான் அறிமுகம் செய்தது. மோடி ஆட்சியில் தான் ரெயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது. திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். பிஜி தீவில் தமிழ் கற்றுக் கொள்ள தேவையான வசதிகளை பாஜக அரசு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.

காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழை அருங்காட்சியகத்தில் வைத்து இருந்தனர். ஆனால், மோடி பார்லிமென்டில் வைத்து அழகு பார்க்கிறார். துணை ஜனாதிபதியாக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை பதவியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி.
ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த திமுக அரசு. அதிக ஊழல் நிறைந்த அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் ஒருவர் சிறைக்கு சென்ற பிறகும் கூட 248 நாட்கள் அமைச்சராக தொடர்ந்தார். ஒரு தலைவர் பணத்தை வாங்கி ஊழலில் சிக்கிக்கொண்டார். கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு தலைவரின் பெயர் அடிபடுகிறது. மணலை அள்ளும் ஊழலிலும் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. ஒரு தலைவரின் பெயர் நிலக்கரி ஊழலில் வெளியே வந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக பட்ஜெட் அறிக்கை, டாஸ்மாக் மற்றும் கடனில் மட்டுமே இயங்குகிறது. அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் அவல நிலை உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் துப்புரவுபணியாளர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. 1300 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் முதல் அரசு ஊழியர்களை போராட்டத்தில் இறங்கினால் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கொடுமைக்கு ஆட்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
மற்ற மாநிலங்களின் மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றி உள்ளனர்.
தமிழகத்தில் இந்துக்கள், அவர்களின் வழிபாட்டு முறை, நம்பிக்கையை முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா உடன் ஒப்பிட்டனர். இந்துக்களின் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. நமது அரசியல் சட்டத்தின் மாண்பினை ஸ்டாலின் குலைத்துவிட்டார். இந்துக்களின் சமய உரிமையை பறிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பிரதமர் மோடி அரசு நிதி அளித்துள்ளது. 2014 முதல் 2024 வரை தமிழகத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
2024 துவங்கி மோடி அரசு மாபெரும் வெற்றி பயணத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறது. அந்தாண்டு மோடி 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்றார். ஒடிசா, அரியானா, மஹாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைத்தது. 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் கடந்த ஆண்டு பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தது. 2025ம் ஆண்டு பீஹாரில் இண்டி கூட்டணி மண்ணைக் கவ்வியது. 2026 ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆட்சியமைப்போம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *