விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்- டெல்லி போலீசார் உறுதி
1 min read
Delhi Police assures that Vijay will be provided with adequate security
11/1/2026
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. த.வெ.க. நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்திய நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 6ஆம் தேதி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 12ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மனை ஏற்று, விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
நாளை காலை தனி விமானத்தில் விஜய் டெல்லி செல்ல உள்ள நிலையில், டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தங்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, கட்சி இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி காவல்துறை, டெல்லியில் விஜய் செல்லும் இடங்களிலும் தங்கும் இடங்களிலும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. விஜய்யை காண அவரது ரசிகர்கள் திரண்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் டெல்லி காவல்துறை செய்து வருகிறது.