மரியா கொரினா மச்சாடோ பெற்ற நோபல் பரிசை டிரம்பிடம் ஒப்படைத்தார்
1 min read
Maria Corina Machado presents Nobel Prize to Trump
16.1.2026
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று பல முறை வந்தாலும், 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை. வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதனிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்பட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, ‘எனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். மச்சாடோவின் இந்த கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான் என நோபல் அமைப்பு திட்டவட்டமாக கூறியிருந்தது.
இதற்கிடையே, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மரியா கொரினா மச்சாடோ கூறுகையில், டிரம்பிற்கு தனது பரிசை வழங்கியதாக தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்று பதிவிட்டுள்ளார்.