“ஊழல் பேர்வழிதான் விஜய்” – திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
1 min read
“Vijay is a corruption figure” – Dindigul Srinivasan
27.1.2026
திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி நாடகமாடுகிறார். மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை இந்த அரசு தாறுமாறாக உயர்த்திவிட்டது.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி விமர்ச்சிக்கிறார். எங்களது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாது என்கிறார். தி.மு.க. அரசு கொடுக்கும் ரூ.1,000 மக்களை சென்றடையும் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அறிவித்த ரூ.2 ஆயிரம் மக்களை சென்றடையாதா?. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தி.மு.க. அரசு ஏமாற்றி இருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் ஆதரவை தி.மு.க. இழந்துவிட்டது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளும் அ.தி.மு.க. வசமாகும். அதேநேரம் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்று அ.தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஊழல்வாதிகள் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறுகிறார். ஆனால் தனது சினிமா படம் வெளியாகும் போது சினிமா தியேட்டர்களில் கள்ளத்தனமாக டிக்கெட் விற்கும் விஜய், தற்போது தனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை என்கிறார். வருமான வரி முறையாக செலுத்தாததால் அவருக்கு ரூ.1½ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது விஜய் ஏற்கனவே ஊழல் செய்தவர் என்பதை தெளிவாக்குகிறது. ஊழல் பேர்வழியாக இருந்துகொண்டு, எல்லாம் செய்துகொண்டிருக்கிறார். அதேபோல் ஆதவ் அர்ஜுனா லாட்டரி சீட்லாம் எப்படி விற்பார் என உங்களுக்கே தெரியும். இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊழல் பற்றி பேசுவது சிரிப்பாகத்தான் வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.