June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்த தேர்தலில் திமுகவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min read

11/2/2026
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் அவர் பேசியதாவது:-

“சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.

நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் .

அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.

பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *