திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
1 min read
Annamalai announces to file another defamation case against DMK MP TR balu
16/2/2026
திமுக எம்பி டிஆர்பாலுவிடம் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன். மற்றொரு நாள் குறுக்கு விசாரணை தொடரும் திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு புதிய அவதூறு வழக்கு தொடர்வேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்த பிறகு சென்னை சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் என் மீது டிஆர்பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரடியாக இன்று நான் 3 மணி நேரமாக டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்எஸ்பாரதி மீது நான் தொடர்ந்த வழக்கில், இன்று அவர் ஆஜர் ஆகாத காரணத்தினால், வழக்கு மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
எப்பொழுதும் சொல்வதை தான் இன்றும் சொல்கிறேன். இந்தியாவில் குறைந்தபட்சமான வழக்கில் மட்டும் தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வாதிடுவார்கள். எனக்கு திமுக செய்திருக்கும் ஊழல் நாங்கள் வெளியிட்டு இருக்கும், டிஎம்கே பைல்ஸ் பார்ட் 1, 2, திமுக எம்பி டிஆர்பாலு மீது நான் சுமத்தி இருக்கும் குற்றம், அனைத்து மீதும் நம்பிக்கை இருக்கும் காரணத்தினால் வழக்கறிஞர் பால் கனகராஜ் கொடுத்திருந்த அபிடவிட்டை திரும்ப பெற்று, நானே இந்த வழக்கில் ஒரு சாமானிய மனிதனாக ஆஜராகி வாதிட்டேன். குறுக்கு விசாரணையின் போது மற்றொரு நாளில், விசாரணை வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து, இந்த வழக்கில் நானே மூத்த வழக்கறிஞர் உறுதுணையோடு வாதாட இருக்கிறேன். நிச்சயமாக திமுகவிற்கு இந்த வழக்கு மூலம் பாடத்தை புகட்டுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி சாமானிய மனிதர்கள் நமது உரிமைக்காக நான் பேசும்போது நம்முடைய வழக்கை, நாமே கோர்ட்டில் எடுத்து வாதாட முடியும் என்பதற்கு இன்றைக்கு நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் சாட்சியாக இருக்கிறது.
இந்த வழக்கில் நான் என்ன கேள்வி கேட்டேன். அவர் என்ன பதில் சொன்னார் என்பதை பத்திரிகை நண்பர்களிடம் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் சொல்ல முடியாது. முழுமையாக வழக்கு முடிந்த பிறகு பொதுவெளியில் சொல்கிறேன். இன்றைக்கு சேது சமுத்திரம் திட்டம் குறித்து நான் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளையும், அவர் நடத்தும் குடும்ப நிறுவனங்கள் குறித்தும், இன்றைக்கு அவர் நீதிமன்றத்திற்கு வந்த கார் எந்த நிறுவனத்தின் மேல் இருக்கு, அவர் வாங்கி இருக்கும் கடன், எல்லா பற்றியும் கேள்வி கேட்டிருக்கிறோம். அடுத்து வரக்கூடிய குறுக்கு விசாரணையின் போது இன்னும் நிறைய கேள்விகளை கேட்க இருக்கிறோம்.
அவர்கள் கேட்டிருக்கும் புதிய தேதியில் மறுபடியும் குறுக்கு விசாரணை நடக்கும். அவருக்கு மார்ச் முழுவதும் பார்லிமென்ட் இருக்கும் காரணத்தினால் அவர்கள் நீதிபதியிடம் பார்லிமென்ட் முடிந்து தேதி கேட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்ச் 10ம் தேதி வழக்கு விசாரணை நடக்கிறது. டிஎம்கே பைலில் நான் குற்றச்சாட்டி இருப்பது குறித்து டிஆர்பாலு பதில் சொல்லாமல் அவர் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். என் மனைவி பெயரில் நான் சொத்து வாங்கி இருப்பதாக சொன்னார்.
நாங்கள் வாங்கி இருக்கும் அனைத்து சொத்துக்களும் வருமான வரி கட்டி வாங்கி இருக்கிறது குறித்து தெரியுமா என்று கேட்டேன் தெரியாது என்று சொன்னார். பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி சொத்து வாங்கி இருக்கிறோம், டாக்குமெண்டில் பார்த்தீர்களா என்று கேட்டேன், தெரியாது என்று சொன்னார்.
எதுவுமே தெரியாம நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாக கூறினார். அதற்காக குறுக்கு விசாரணை நடக்கும் போது நீதிபதியிடம் பதிவு செய்துவிட்டு, நாளை அவர் மீது மீண்டும் ஒரு புதிய அவதூறு வழக்கை தொடுக்க இருக்கிறோம். இந்த வழக்கை பொறுத்தஅளவில், நாங்கள் விடப்போவது கிடையாது. அந்த அவதூர் வழக்கில் நானும், எனது மனைவியும், திருமணத்திற்கு பிறகு 15 வருடம் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறோம். எனது மனைவி மும்பை, சென்னையில் நிறுவனத்தில் பணிபுரிந்த போது வாங்கி இருக்கும் சம்பளம்.
நாங்கள் கடன் வாங்கிய சொத்துக்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட இருக்கிறோம். நான் வாங்கி இருக்கும் கடன் குறித்த விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுவேன்.
இதையெல்லாம் எனக்கு டிஆர்பாலுவிடம் தொடுக்க உள்ள புதிய அவதூறு வழக்கு வாயிலாக பத்திரிகையாளர் மூலம் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.