August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரான் போரால் பொள்ளாச்சியில் ரூ.100 கோடி தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு

1 min read

Pollachi’s coconut fiber exports hit by Rs. 100 crore due to Iran war

6.3.2026
பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழில் பிரதானமாக உள்ளது.

தென்னை மட்டையில் இருந்து நார் துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சியில் உள்ள ஆலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் துகள் மற்றும் நார்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்க இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரான் தனது கடல் எல்லையை மூடி விட்டதால் வர்த்தக கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் கேரளத்தின் கொச்சி துறைமுகங்களில் தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

இந்தியாவில் ஆண்டுக்கு 11 லட்சம் டன் தென்னை நாரும், 20 லட்சம் டன் தென்னை நார் துகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே அமெரிக்க விதித்த வரி உயர்வு காரணமாக இந்த தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் வரி குறைப்பின் காரணமாக சிறிய முன்னேற்றம் காணப்பட்டது.

தற்போதைய போரால் ஈரான் தனது கடல் எல்லையை மூடியதால் வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் போர் நீடித்தால் ரூ.1000 கோடி வரை தென்னை நார் மற்றும் நார் துகள் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசு உள்நாட்டு வணிகத்தை அதிகப்படுத்தும் சாத்திய கூறுகளை கயிறு வாரியம் மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கயிறு வாரியம், உற்பததியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, நேபாளம், பூடான், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தொழில் முன்னேற்றத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *