தென்காசியில் ரூ.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
1 min read
Udhayanidhi Stalin provided welfare assistance worth Rs. 44 crores in Tenkasi
6.3.2026
தென்காசி மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 7 ஆயிரத்து 127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பழனி நாடார் எம்.எல்.ஏ., ராணி ஸ்ரீகுமார் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு மாதவன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.