செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – பொன்முடி விடுதலை
1 min read
Red sand quarry scam case – Former Minister Ponmudi released
2/4\2026
கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சியின்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அப்போது கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, அவரது மகனும், தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி, தி.மு.க. நிா்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், லோகநாதன் மற்றும் கோபிநாத் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 2-ந்தேதி(இன்று) வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, கோதகுமார், சதானந்தம் உள்ளிட்ட 7 பேர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில், குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் நிரூபிக்காத காரணத்தால், அதிகளவில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.