June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்-சரமாரி குற்றச்சாட்டு

1 min read

Tamil Nadu Mahila Congress President resigns

10.4.2026
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் மிகுந்த அன்புடன் நேசித்த நமது கட்சியிலிருந்து எனது ராஜினாமாவை மிகுந்த வேதனையுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதில் வருத்தம் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த அன்பு ஒருதலைப்பட்சமாகவே இருந்துவிட்டது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், நீங்களும் உறுதியாக இருந்தபோதிலும், எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன் மூலம் நான் அவமானப்படுத்தப்பட்டேன்.

இது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி , சோனியா காந்தி மற்றும் உங்களது கனவான ‘பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு’ என்பது வெறும் வாய்வார்த்தையாகவே சுருங்கிவிட்டது.

தகுதியுள்ள என்னைப் போன்ற பெண்களுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. எங்களுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை.

மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் எனக்கு, கட்சித் தலைமை அநீதி இழைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் நான் இது குறித்து முறையிட்டேன். ஆனால் வழக்கம்போல அது வீணாகிவிட்டது.

தற்போதுள்ள ஊழல் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மற்றும் தற்போதைய ஜார்கண்ட் பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி செல்வி சுதா, ஓவர்சீஸ் காங்கிரஸில் சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய புஷ்பராஜ் மற்றும் தற்போதைய தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதித் ஆல்வா ஆகியோரின் தவறான உள்நோக்கங்களுக்கு ஆதரவாகவே மல்லிகார்ஜுன கார்கே செயல்பட்டுள்ளார்.

“மாணவர் காங்கிரஸ் முதல் கடந்த 3 தசாப்தங்களாக நமது கட்சிக்காக நான் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். 2008-ல் இளைஞர் காங்கிரஸின் ‘டேலண்ட் ஹண்ட்’ திட்டத்தின் மூலம் உங்களால் அடையாளம் காணப்பட்டு, வளர்க்கப்பட்டவள் நான். ஆனால், தற்போது எனது கண்ணியமும் சுயமரியாதையும் சமரசம் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன்.

இந்த நிலையில் என்னால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது. எனக்கே நீதி மறுக்கப்படும்போது, என்னுடன் பணியாற்றும் சக பெண் நிர்வாகிகள் மற்றும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உரிமையை என்னால் எப்படிப் பெற்றுத் தர முடியும்?

எனவே, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன். இருப்பினும், நமது கட்சி மீதும், காந்தி குடும்பத்தினர் மீதும் எப்போதும் அன்புடன் இருப்பேன்.”

கார்கேவைப் போன்ற ஒரு மூத்த தலைவர், ஊழல் நிறைந்த நமது மாநிலத் தலைவரின் அமைப்பை இவ்வளவு தூரம் ஆதரிப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இவர்களின் இத்தகைய செயல்பாடுகளால் கட்சியின் உண்மையான தொண்டர்கள் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது. இது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.”

இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸும் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *