நிலம் வாங்கியதில் முறைகேடு: பிரியங்கா கணவருக்கு டெல்லி கோர்ட் சம்மன்
1 min read
Delhi court summons Priyanka’s husband over land purchase irregularities
16.4.2026
அரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008- ஆம் ஆண்டு பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேரும் அடுத்த மாதம் 16ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் விடுத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.