“விஜய் ஒரு பேட்டி கொடுத்தால் நான் பதவி விலகுகிறேன்..” – மன்னார்குடி வெற்றி வேட்பாளர் காமராஜ்
1 min read
“If Vijay gives an interview, I will resign.” – Mannargudi winning candidate Kamaraj
9.5.2026
சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என கவர்னரிடம் நேற்று புகார் அளித்து இருந்தேன். அத்துடன், தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்தேன். ஆனால் காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே? காரில் அமரந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். எனது கட்சி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்திருந்தால் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்செல்லாதது ஏன்.?
எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி, எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தவெகவினர் முயல்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டவும், பயமுறுத்தவும் பார்க்கின்றனர். விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன.? விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன? காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
முதல்-அமைச்சர் ஆவதற்காக விஜய் மோசடி செய்கிறார். மக்களுக்கு தவெக விளக்கம் அளிக்க வேண்டும்.
அமமுக எம்.எல்.ஏ ஆதரவு என்றால், ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டவுடன் அவரையும் கவர்னரை சந்திக்க அழைத்து சென்றிருக்கலாமே.. போலி கடிதத்தை கொடுத்துவிட்டு பின்னால் பேரம் பேசலாம் என்ற திட்டத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். ஆதரவு கடிதம் போர்ஜரி பின்னணியில் இருப்பது விஜய்தான். இதுதொடர்பாக நான் கவர்னரிடமும் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளேன்.
ஊழலை ஒழிப்பேன் என சொல்லி விட்டு, முதல்-அமைச்சர் ஆவதற்கே ஊழல் செய்பவர் தவெக தலைவர் விஜய். ஆட்சி அமைப்பதற்கே இவ்வளவு மோசடி செய்யும் போது, ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னார்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் காமராஜ் பேசியதாவது:-
108 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கிற விஜய் ஏன் இந்தவாறு முயற்சி செய்கிறார். மெஜாரிட்டி இருந்தால் தான் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லை என்றால் விட்டு விட்டு செல்ல வேண்டியதுதானே.. அடுத்த ஆப்சன் என்ன என்று நீங்கள் கவர்னரிடம் கேளுங்கள்.. விஜயை உங்களால் (செய்தியாளர்கள்) பேட்டி எடுக்க முடியுமா..? உங்கள் அனைவரிடம் கேட்கிறேன் விஜய்யிடம் ஒரு பேட்டி எடுத்து வாருங்கள் .. நான் எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.