மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழப்பு
1 min read
18 people die after drinking spurious liquor in Maharashtra
29.5.2026
மராட்டிய மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேர்: புனே நகரின் காலே படல் பகுதியில் 3 பேர்; ஹடாப்சர் பகுதியில் 2 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், அருகில் உள்ள பகுதிகளையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கள்ளச்சாராயத்தை யோகேஷ் வான்கடே என்பவர் தயாரித்ததாகவும், அவர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக யோகேஷ் வான்கடேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மராட்டியத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் ஆணையர்களுக்கு அவர் நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.