“அலி கமேனிக்காக ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்..” டொனால்டு டிரம்ப் சாடல்
1 min read
“The Iranian people are shedding crocodile tears for Ali Khamenei…” Donald Trump lashes out.
6.7.2026
முன்னாள் ஈரானிய உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதி சடங்கில் காணப்பட்ட துக்க காட்சிகளை கண்டு ஆச்சரியமடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:-
அலி கமெனியின் இறுதி சடங்கில் சில ஈரானியர்கள் அழுவதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். மக்கள் கமெனியை வெறுப்பதாக நினைத்தேன். ஒருவேளை இது போலி கண்ணீராக இருக்கலாம்.
கமெனியின் படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் ஆர்வமாக உள்ளது. அவர்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறார்கள். இறுதி சடங்குகள் முடியும் வரை ஒரு வாரத்திற்கு பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்க அமெரிக்காவும், ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் எந்த தாக்குதல்களும் நடத்தப்போவதில்லை. அவர்கள் அனைவரும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒரே ஒரு குண்டு வீச்சில் நாம் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட முடியும், ஆனால் நாம் அதை செய்யப் போவதில்லை. ஏனென்றால், அப்படி செய்தால் பேச்சுவார்த்தை நடத்த நமக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
36 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய அலி கமேனி, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளான பிப்ரவரி 28ம் தேதி அன்று கொல்லப்பட்டார். இது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டியது. போரின் காரணமாக, இஸ்லாமிய பாரம்பரியம் 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், ஈரான் அவரது அடக்கத்தை தாமதப்படுத்தியது.
கடந்த 4ம் தேதி அன்று தொடங்கிய இறுதி ஊர்வலம், புனித நகரமான கோமில் நடைபெறும் சடங்குகளுடன் தொடங்கி, வருகிற 9ம் தேதி அன்று கமெனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் அவரது நல்லடக்கத்துடன் நிறைவடைகிறது. ஈரான் முழுவதும் நடைபெற்ற இறுதி ஊர்வலங்களில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சனிக்கிழமை நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.