புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் அரணாக மாறும் மேற்குத் தொடர்ச்சி மலை
1 min read
The Western Ghats are becoming a bulwark against global warming.
11.7.2026
வரும் 2100-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் மிகப்பெரிய கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உறிஞ்சும் இயற்கை அரணாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவெடுக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம்’ நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச காலநிலை இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் காடுகள் எந்த அளவிற்கு முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன என்பதை விளக்குகிறது.
காற்றில் அதிகரித்து வரும் கார்பன்-டை-ஆக்சைடு அளவு மற்றும் இந்தியாவில் பெய்யக் கூடிய மழைப்பொழிவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் உற்பத்தித் திறன் வேகமாக அதிகரிக்கும். இதனால் வளிமண்டலத்தில் உள்ள நச்சு வாயுக்களை உறிஞ்சுவதில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முதலிடம் வகிக்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் சேர்த்து, மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியக் காடுகளும் இந்தியாவின் முக்கிய கார்பன் சேமிப்புக் கிடங்குகளாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், காலநிலை மாற்றம் காடுகளுக்கு நல்லது என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடுமையான வறட்சி, திடீர் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் தாவரங்களின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கும்.
மழைப்பொழிவு தாவர வளர்ப்பிற்கு உதவினாலும், தீவிர காலநிலை மாற்றங்கள் காடுகளின் சுற்றுச்சூழல் பின்னடைவையும், அங்குள்ள அரிய பல்லுயிர் பெருக்கத்தையும் நீண்ட காலத்தில் பலவீனப்படுத்தக் கூடும்.
எனவே, இந்த இயற்கை கார்பன் உறிஞ்சிகளைப் பாதுகாப்பதும், காடழிப்பைத் தடுப்பதும் இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதற்கு மிக அத்தியாவசியமானது என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.