குவைத்தின் முதல் ‘கோல்டன் ரெசிடென்சி’ விசா- இந்தியர் யூசுப் அலிக்கு வழங்கி கவுரவம்
1 min read
Kuwait’s first ‘Golden Residency’ visa awarded to Indian national Yusuff Ali.
15/7/2026
பொருளாதாரப் பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், குவைத் அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நீண்டகால விசா திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது 15 ஆண்டுகால ‘கோல்டன் ரெசிடென்சி’ விசா, லூலூ குரூப் தலைவர் எம்.ஏ. யூசுப் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது
குவைத் சிட்டியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், குவைத்தின் முதன்மை துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபா இந்த சிறப்பு விசாவை யூசுப் அலியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இந்நிகழ்வின் போது பாதுகாப்பு சேவைகளுக்கான உதவி அண்டர்செக்ரட்டரி பிரிகேடியர் ஜெனரல் ஃபவாஸ் அல்-ரூமியும் உடனிருந்தார்.
எண்ணெய் வளங்களை மட்டுமே நம்பியிருக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் திறமையாளர்களை ஈர்க்கவும் குவைத் அரசு இந்த நீண்டகால விசா முறையைக் கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன் இருந்த தற்காலிக விசா முறைகள் போலல்லாமல், இந்த புதிய ‘கோல்டன் ரெசிடென்சி’ திட்டம் 15 ஆண்டுகள் வரை குவைத்தில் தங்கி தொழில் செய்யவும், தங்களது குடும்பத்தினரை அழைத்து வரவும் வழிவகை செய்கிறது. மேலும், இது பாரம்பரிய வேலைவாய்ப்பு ஸ்பான்சர்ஷிப் கட்டுப்பாடுகளிலிருந்து முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளிக்கிறது.
இது குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல்-சபா, “இந்த கோல்டன் ரெசிடென்சி விசா வழங்கும் நடைமுறை, குவைத் நாட்டில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதற்கான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் சில்லறை வர்த்தகத் துறையில் மிக முக்கியப் புள்ளியாக விளங்கும் லூலூ குரூப், குவைத்தில் பரந்து விரிந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஷாப்பிங் மால்களை நடத்தி வருகிறது.
குவைத்தின் பொருளாதார வளர்ச்சி, நுகர்வோர் சந்தை மேம்பாடு மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதில் லூலூ குழுமத்தின் பங்கு மிக முக்கியமானது. குவைத் நாட்டின் பொருளாதாரத்திற்கு யூசுப் அலி ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே அவருக்கு இந்த முதல் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி, வளைகுடா நாடுகளில் இத்தகைய உயரிய முதலாவது நீண்டகால விசாவைப் பெறுவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது நிரந்தர ‘கோல்டன் கார்டு’ பெற்ற முதல் நபர் இவர் தான். மேலும், பஹ்ரைன் நாட்டின் முதலாவது ‘கோல்டன் ரெசிடென்சி’ விசா யூசுப் அலிக்கே வழங்கப்பட்டது.
தற்போது இந்த வரிசையில் குவைத் நாடும் இணைந்துள்ளது, சர்வதேச வர்த்தக அரங்கில் இந்தியர்களின் ஆதிக்கத்திற்கும், குறிப்பாக யூசுப் அலியின் வணிகத் திறனுக்கும் சான்றாக அமைந்துள்ளது.