த.வெ.க.வின் காமராஜர் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் – ப.சிதம்பரம் பேச்சு
1 min read
TVK’s Kamaraj-style rule must continue for five years – P. Chidambaram
20.7.2026
தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரசாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்ற காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. காமராஜரின் ஆட்சிக்காலம் அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியது.
அந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சே இல்லை. எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதேபோல் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத செயல்பாடுகள், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் போன்றது.
புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் பத்திரப் பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பள்ளி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
நிச்சயம் முதலமைச்சர் விஜய்யின் அரசு அதனையும் சாதிக்கும் என்று தான் நம்புகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும். காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது, என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் எம்.எல். ஏ.க்கள் அணி திரண்டனர்.
இவர்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பின்னர் மனம் மாறி எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து விட்டனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில் கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 1000-த்திற்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி இன்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் 5 வேன்கள், 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் அங்கு தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.
முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.