July 21, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை இரட்டைக் கொலையில் கடைசி நபர் கைது

1 min read

Last suspect arrested in Nellai double murder case.

21.7.2026
நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கடைசி நபரையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள்பாண்டியன் குடும்பத்திற்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து (வயது 40) என்பவர் தனது மகன்களான சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே உள்ள மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர்.

காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோத விட்ட கும்பல், காளிமுத்துவை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது. கார் மோதியதில் சிறுவன் ஜெயராஜ் உயிரிழந்தான். மர்மநபர்கள் சிறுவன் சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த மகேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை இரட்டை கொலை வழக்கில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்தை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இடதுகாலில் காயமடைந்த அஜித் மற்றும் வெட்டுக்காயம் அடைந்த காவலர் பரமசிவம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கின் கடைசி குற்றவாளியான கந்தசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *