சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் – டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Sonam Wangchuk can be shifted to a private hospital – Delhi High Court order.
21.7.2026
மத்திய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி கால வரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார்.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மத்திய அரசுக்கு சொந்தமான டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரது மனைவி ஆங்மோ, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை நேற்று முன்தினம் விசாரித்த ஒற்றை நீதிபதி மினி புஷ்கர்ணா, சோனம் வாங்சுக்கின் சிகிச்சையில் தலையிட வேண்டியது இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் அமர்வில் ஆங்மோ மேல்முறையீடு செய்தார். அவரது மனு, தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம், சோனம் வாங்சுக்கின் நோயியல் குறிப்புகள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை பரிசீலித்து, சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து 21-ந் தேதி (இன்று) முடிவு செய்யப்படும். அப்போது, சோனம் வாங்சுக்குக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குனர், எய்ம்ஸ் அவசர பிரிவு டாக்டர் ஆகியோரும் இருக்க வேண்டும். இதற்கு முன்பு சிகிச்சை அளித்த டாக்டரும் இருக்க வேண்டும். அத்துடன், தனியார் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட சோனம் வாங்சுக்கின் ரத்த பரிசோதனை முடிவுகளை அவரது மனைவி தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக்கை வேறு (தனியார்) மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சோனம் வாங்சுக்கிற்குச் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைக்குமாறும் மேடான்டா (தனியார்) மருத்துவமனைக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது குறித்த விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கூடாது என தனிநீதிபதி உத்தரவிட்ட நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.