ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
Prime Minister Modi congratulates Neeraj Chopra on winning the silver medal in the javelin throw event.
1.8.2026
காமன்வெல்த் போட்டி ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்த ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டாரும், ஒலிம்பிக் நாயகனுமான நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு களம் கண்டார்.
மைதானமே அதிரும் வகையில் உலக தரம் வாய்ந்த வீரர்களுடன் பலப்பரீட்சை நடத்திய நீரஜ் சோப்ரா, தனது அசத்தலான திறமையால் ஈட்டியை வெகு தூரம் எறிந்து 2-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயலாற்றி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்!
அவர் மீண்டும் ஒருமுறை அபாரமான நிலைத்தன்மை, நிதானம், மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றிகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.