August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தெலுங்கானாவில் மழை நீருடன் சேர்ந்து வானத்தில் இருந்து கொட்டிய மீன்கள்

1 min read

Fish rained down from the sky along with rainwater in Telangana

1.8.2026
மழை நீருடன் சேர்ந்து வானத்தில் இருந்து மீன்கள் விசித்திரமான முறையில் கீழே கொட்டியதை கண்டு அங்கிருந்த மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு அரசு சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள சென்னூர் பகுதியில் வெள்ளி அன்று பலத்த மழை பெய்தது. அங்குள்ள துப்புலா அனுமன் தெருவில் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வானத்தில் இருந்து மழையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் கீழே விழுந்தன.

மழை நீருடன் சேர்ந்து வானத்தில் இருந்து மீன்கள் விசித்திரமான முறையில் கீழே கொட்டியதை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அந்த விசித்திர காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சாலையெங்கும் துள்ளி குதித்த மீன்களை அங்கிருந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளால் அள்ளி பிடித்தனர். ஒருசிலர் தங்களது குடைகளை தலைகீழாக பிடித்து, வானத்தில் இருந்து விழுந்த மீன்களை சேகரித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால், அருகில் உள்ள குளங்களில் இருந்த மீன்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கலாம்” என தெரிவித்தனர். ஆனால், ஒரு சிலரோ வானத்தில் இருந்து நேரடியாக மீன் மழையே பெய்ததாக ஆச்சரியத்துடன் கூறினர்.

இதற்கிடையே, வானத்தில் இருந்து மீன்கள் விழும் இந்த அரிய காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இது குறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அளித்துள்ள சுவாரசியமான விஞ்ஞான விளக்கம் வருமாறு:-
கடல், ஏரி அல்லது பெரிய குளங்களின் மேல் பகுதி வழியாக பலத்த சூறாவளி அல்லது சுழற்காற்று வீசும்போது, அது தண்ணீரின் மீது ஒரு சக்திவாய்ந்த உறிஞ்சுக் குழாய் போல செயல்படுகிறது. இதனை ‘நீர்ச்சுழற்காற்று’ என்று அழைக்கிறார்கள்.

இந்தச் சுழற்காற்று தண்ணீரை மேல்நோக்கி உறிஞ்சும்போது, அதில் நீந்தி கொண்டிருக்கும் சிறிய ரக மீன்கள், தவளைகள், நண்டுகள் போன்ற உயிரினங்களும் தண்ணீரோடு சேர்ந்து அசுர வேகத்தில் வளிமண்டலத்தை நோக்கி மேலே இழுக்கப்படுகின்றன.

அவ்வாறு உறிஞ்சப்பட்ட மீன்கள், புயல் மேகங்களின் அடியில் உள்ள மிக வலுவான மேல்நோக்கிய காற்று நீரோட்டத்தால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றில் அடித்து செல்லப்படுகின்றன. மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்ய தொடங்கும் போதோ அல்லது சுழற்காற்றின் வேகம் சட்டென்று குறையும் போதோ, காற்றில் மிதந்து கொண்டிருந்த மீன்களை காற்றால் தாங்கி பிடிக்க முடிவதில்லை. இதனால், அவை சாதாரண மழைத்துளிகளோடு சேர்ந்து தரையில் ‘மீன் மழையாக’ கீழே விழுகின்றன.
இவ்வாறு விளக்கம் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *