பாபநாசம் அருகே விவசாயியை கொன்ற கரடி – டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்
1 min read
Bear kills farmer near Papanasam; intensive search using drones underway.
2.8.2026
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வடமலை சமுத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் கரடி ஒன்று சுற்றி வந்தது. அந்த கரடியை விரட்டுவதற்கு விவசாயிகள் முயற்சி மேற்கொண்டபோது அது அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் இரவு நேரத்தில் கரடி திரும்பி வந்து தோட்டத்தில் பாதுகாப்புக்கு இருந்த விவசாயி ஒருவரை தாக்கி கொடூரமாக கொலை செய்தது.
கிராம மக்கள் அந்த கரடியை விரட்டிவிட்டு விவசாயியின் உடலை மீட்பதற்கு பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இதனை தொடர்ந்து கரடியை தேடிப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று டிரோன் கேமராவின் உதவியோடு கரடியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள மலை முகடுகள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் டிரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. கரடியை பார்த்தவுடன் அதனை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 இடங்களில் கரடியை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.