எத்தனால் கலந்த பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு
1 min read
Savings of up to Rs. 30 per litre with ethanol-blended petrol.
2.8.2026
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் ரூ.13,000 வரை உயர்ந்திருந்த போதிலும், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டம் காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 ஆகவே உள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் இல்லையெனில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்திருக்கும் என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைப்பது, உள்நாட்டு விவசாய விளைபொருட்களுக்கு நிலையான சந்தையை உருவாக்குவது மற்றும் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகிய நோக்கங்களுடன் மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது, E20 பெட்ரோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் குறித்து தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், உள்நாட்டில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் எத்தனால் கொள்முதல் செய்யப்படுவதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் நேரடியாக நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவதன் மூலம், நுகர்வோருக்கு லிட்டருக்கு சுமார் ரூ.30 வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் அல்லது இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மானிய அரிசி எத்தனால் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் அமைச்சகம் மறுத்துள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 75 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான ஏற்ற, இறக்கங்கள் பதிவான போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.