அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் செல்ல தடை
1 min read
Tourists banned from visiting Agasthiyar Falls for 10 days starting tomorrow.
6.8.2026
ஆடி அமாவாசையை முன்னிட்டு அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்கிறது. மேலும் சில மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு விளங்குகிறது. இந்த ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் கோவில் அருகில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். இங்கு குளிக்க வருபவர்கள், தண்ணீர் இல்லை என்று திரும்பி சென்றது கிடையாது. இதே போல் பாபநாசத்தில் உள்ள கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடி பாபநாச சுவாமி உலகம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். தங்களது பாவங்கள் போக்க வேண்டி செல்வார்கள்.
இந்நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.