லஞ்சப்பணத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது- 2 பேர் விடுதலை
1 min read
Punishment cannot be imposed based solely on the bribe money – Two acquitted.
21.8.2026
30 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 20 ரூபாய் லஞ்ச வழக்கில் குஜராத் அரசு ஊழியர்கள் இருவரை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது.
குஜராத்தில் வருமானச் சான்றிதழ் பெறுவதற்காக ஒருவர் வருவாய் அதிகாரியை அணுகினார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, பெச்சிரி கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. அப்போது, வருமானச் சான்றிதழ் வழங்க ரூ.120 லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது. இதில் ரூ.100 தனக்கும், ரூ.20 அலுவலக உதவியாளருக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர், லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்களது ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.20 நோட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் கீழ்நீதிமன்றம் 6 மாத கடுங்காவல் மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது. குஜராத் ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ்.சந்தூர்கர் ஆகியோர், புகார்தாரர் லஞ்சம் கேட்டதாக கூறியதில் முரண்பாடுகள் இருக்கிறது. லஞ்சம் கேட்டது முதலில் அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். அது நிரூபிக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என்று கூறி குஜராத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, இருவரையும் விடுதலை செய்தனர்.
இதன்படி 20 ரூபாய் லஞ்சப் புகாரை தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மூப்பது வருடங்கள் கடந்த நிலையில், 1996-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஊழல் வழக்கில், அரசு ஊழியர்கள் இருவரை விடுவித்து சுப்ரீம்கோர்ட்டு இறுதியாக தீர்ப்பளித்துள்ளது.