பரந்தூர் திட்டம் ரத்து:தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை
1 min read
Cancellation of Parandur Project: Tamil Nadu’s Development Will Be Affected – M.K. Stalin’s Statement
24.8.2026
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது பெருத்த ஏமாற்றம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவருடை அறிக்கை வருமாறு:- பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழகத்தின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்; பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.
அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழகத்தின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோ மொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்;
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்பு தான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப் பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பல கட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம்.
தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழகத்தின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழகம் கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்வரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.