சங்கரன்கோவிலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் வெட்டிக்கொலை
1 min read
Young man whose marriage was fixed hacked to death in Sankarankovil.
24.8.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆவணி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞரை வயல்காட்டில் மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவிக தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் மாரியப்பன் இன்று மதியம் திரு.வி.க தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வயல் காட்டில் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடைப்பதாக சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிங்ஸ்லி தேவானந்த், சுஜித் ஆனந்த், பாரதிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாரியப்பனின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாரியப்பனை வெட்டி படுகொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது பற்றி சங்கரன்கோவில் டவுண் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.