முதல்வர் விஜய்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார்
1 min read
Chief Minister Vijay! Released water from Mettur Dam
1/9/12026
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார்.
சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.
பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.
மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.