மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்
1 min read
Whale vomit worth Rs4.5 crore seized in Maharashtra.
2/9/2026
மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே திக்ராஜ் பகுதியில், சாங்லி கிராமப்புற காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர ரோந்து பணியின் போது ரூ.4.5 கோடி மதிப்பிலான ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இரு பெட்டிகளில் இந்த விலையுயர்ந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான அமோல் சித் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் இந்த திமிங்கல எச்சம் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய அந்த முக்கிய நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஒரு நாளுக்கு முன்பாக, சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ரூ.2.4 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்திருந்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் இந்த மெழுகு போன்ற ஆம்பர்ஹ்ரிஸ் பொருள், விலையுயர்ந்த வாசனை திரவியங்களின் நறுமணம் நீண்ட நேரம் நிலைத்திருக்கப் பயன்படுகிறது. மேலும் சில நாடுகளில் நரம்பு மண்டலம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான பாரம்பரிய மருந்துகளிலும் இது முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் இதற்கு பெரும் தேவை நிலவுகிறது.