தென்காசி மாவட்டத்தில் 5,7-ந் தேதிகளில் வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம்
1 min read
Door-to-door distribution of ration supplies in Tenkasi district on the 5th and 7th.
3.9.2026
தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்-மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நியாயவிலைக் கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 5 (சனி) மற்றும் 7 (திங்கள்) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதார்ர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்கள் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் விநியோகம் செய்யப்படும்.
தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.