September 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்

1 min read

Murder of former AIADMK minister’s son: Brother’s savage act

4.9.2026
அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (40) வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது அவரது சொந்த அண்ணன் ராஜபாண்டி (42) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரமான கொலை சம்பவத்தின் குலைநடுக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் முதல் மனைவியின் மகன் ராஜபாண்டி மற்றும் இரண்டாம் மனைவியின் மகன் ராஜராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ராஜராஜன் தனது வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு வந்த ராஜபாண்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ராஜபாண்டி பயங்கர ஆயுதங்களுடன் ராஜராஜனை வெட்டப் பாய்ந்தார். உயிருக்கு பயந்து ராஜராஜன் வீதியில் அலறியபடி ஓட, அவரை அரிவாளுடன் ராஜபாண்டி ஆக்ரோஷமாக ஓடவிட்டு விரட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தப்பிக்க ஓடிய ராஜராஜன் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்த போதிலும், விடாமல் துரத்தி சென்ற ராஜபாண்டி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கு இருந்த கேஸ் சிலிண்டரை தூக்கி அவரது தலையில் போட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இதில் தலைநசுங்கி ராஜராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜபாண்டி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் ராஜராஜன் மனைவி மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜராஜன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் கொலை செய்த ராஜபாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வட காடு-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் ராஜராஜன் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜராஜனை கொலை செய்த அவரது சகோதரர் ராஜபாண்டி புதுக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வடகாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *