தென்காசியில் 19-ந் தேதி கண்ணதாசன் நூற்றாண்டு விழா
1 min read
Kannadasan Centenary Celebration in Tenkasi on the 19th
15.9.2026
தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் ‘நூற்றாண்டை நோக்கி’ என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் “கண்ணதாசன் என்னும் திரைக்கடல்” என்ற தலைப்பிலான கண்ணதாசன் நூற்றாண்டு விழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு தென்காசி கழக மண்டபத்தில் வைத்து விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு ‘தேனருவித் தென்றல்’ பேராசிரியர் மு.இராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
விழாவில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் கருத்துரையாற்றுகிறார்கள்.
”கருத்து அலைகள்” என்ற தலைப்பில் கடையம் திருவள்ளுவர் கழக செயலாளரும், இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியருமான க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் பேசுகிறார்.
மேனாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பேரா. அ.சுப்பையா பாண்டியன் ‘தத்துவ முத்துக்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
மேனாள் தொழிலகப் பாதுகாப்பு (அணுசக்தித் துறை) குற்றாலம் ஆ.சதாசிவம் ‘கவிக்காற்று மொழி’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
காலங்கள் மாறினாலும் அழியாத காவியக் கவிஞரின் படைப்புகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு திருவள்ளுவர் கழகத் தலைவர் ந.கனகசபாபதி, செயலாளர் இராம தீத்தரப்பண், பொருளாளர் வ.சந்திரசேகரன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.