51 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணை-மோடி வழங்கினார்
1 min read
Modi hands over Central Government appointment orders to 51,000 people.
19.9.2026
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலக சந்தையில் ஆதிக்கத்தை செலுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 40 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் இந்த நாடுகளுக்கு குறைந்த வரியில் அல்லது எந்தவித வரியும் இல்லாமலும் ஏற்றுமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசு பணியில் புதிதாக இணைய உள்ள 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் ’ரோஸ்கர் மேளா ‘ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி மத்திய அரசுப்பணியில் இணைய உள்ள பயனாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
40 நாடுகளுடன் நாம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய தொழில் கூட்டாளிகள், புதிய சந்தைகள், வாய்ப்புகளை உருவாக்கும்.
நமது தொழில்முனைவோர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்த தொழில் கூட்டமைப்பின் கூட்டாளிகள்தான். இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்நிறுவனங்கள் மிகப்பெரிய நகரங்களில் மட்டும் உருவாகவில்லை. தற்போது நாட்டின் சிறு நகரங்களிலும் ஸ்டார்ட் அப் தொழிநிறுவனங்கள் உருவாகி வருகின்றன
இவ்வாறு கூறினார்.