September 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தருமபுரி அருகே பாறை உருண்டு விழுந்து, ரெயிலின் சக்கர பகுதி சேதம்

1 min read

A boulder rolled down and fell near Dharmapuri, damaging the wheel section of a train

20.9.2026
தருமபுரி மாவட்டம் தொப்பூர் – முத்தம்பட்டி இடையே இன்று காலை பெய்த கனமழை காரணமாகத் திடீரெனப் பலத்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறை உருண்டு விழுந்ததில் ரயிலின் சக்கரம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் இன்று காலை தொப்பூர் – முத்தம்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பாதையில் கடந்து சென்றபோது, அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென பலத்த மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவின் வேகம் தாங்காமல் மலையின் உச்சியிலிருந்து ஒரு ராட்சத பாறை பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை நோக்கி உருண்டு வந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த பெரிய பாறை, வேகமாகச் சென்று கொண்டிருந்த நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பக்கவாட்டு பகுதியிலும், சக்கரத்திலும் பயங்கரமாக மோதியது.

பாறை மோதிய வேகத்தில் ரெயிலின் சக்கர பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். எனினும், லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் ரெயில் தடம் புரளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை; அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
இதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான ரெயில் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு அருகில் உள்ள தருமபுரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த ரெயில்வே தொழில்நுட்பக் குழுவினர், சேதமடைந்த சக்கர பகுதியை முழுமையாக பழுது நீக்கி சரிசெய்தனர்.ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ரெயிலை முழுமையாக ஆய்வு செய்து அனுமதி அளித்த பின், ரெயில் மீண்டும் பெங்களூரு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

மலைப்பாதையில் ஓடும் ரெயில் மீது பாறை உருண்டு விழுந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *