உத்தபிரதேச மாநிலத்தில் தங்க சுரங்கம் இல்லை: இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு
1 min readNo gold mining in Uttar Pradesh
22/2/2020
உத்தரபிரதேசத்தில் தங்கச் சுரங்கம் இருப்பதாக கண்டுபிடித்து அறிவிக்கப்பட்டது தவறு என்று இந்திய புவியியல் ஆய்பு மையம் அறிவித்து உள்ளது.
தங்கச் சுரங்கம்
உத்தரபிரதேச மாநில சுரங்கத் துறை அலுவலர் கே.கே.ராய் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவின் சோன் பகாதி, ஹார்தி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிக்குப் பிறகு இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் மின்னணு ஏல முறையில் நடைபெறும். சோன் பகாதியில் சுமார் 2,943.26 டன் தங்க படிமமும், ஹார்தியில் 646.16 டன் தங்க படிமமும் உள்ளன. தங்கம் தவிர யுரேனியம் போன்ற வேறு சில தாதுப் படிமங்களும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கம் தற்போது இந்தியாவில் உள்ள தங்கத்தைவிட 5 மடங்கு அதிகம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
தவறான தகவல்
இந்த தகவல் தவறானது என்று இப்போது இந்திய புவியியல் ஆய்பு மையம் அறிவித்து உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவின் சோன் பகாதி, ஹார்தி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுரங்கத் துறை அலுவலர் கே.கே. ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆனால், இப்படி எந்தவொரு தங்க படிமத்தையும் கண்டுபிடிக்கவில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) நேற்று (சனிக்கிழமை) மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு மைய பொது இயக்குனர் எம் ஸ்ரீதர் கொல்கத்தாவில் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-
இதுபோன்ற தரவுகள் எதுவும் ஜிஎஸ்ஐ தரப்பில் இருந்து யாரிடமும் வழங்கப்படவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இதுபோன்ற வளமிக்க தங்க படிமம் எதையும் ஜிஎஸ்ஐ கணக்கிடவில்லை. தாதுக்கள் தொடர்பான எந்தவொரு எங்களது கண்டுபிடிப்புகளையும் மாநிலப் பிரிவுகளுடன் ஆய்வு நடத்திய பிறகே அதைப் பகிர்வோம். அந்தப் பகுதியில் 1998-99 மற்றும் 1999-2000 ஆகிய காலகட்டத்தில் நாங்கள் (ஜிஎஸ்ஐ, வடக்குப் பிராந்தியம்) பணிகளை மேற்கொண்டோம். இதுதொடர்பான அறிக்கையை தகவலுக்காகவும், அடுத்தகட்ட தேவையான நடவடிக்கைக்காவும் உத்தரப் பிரதேச புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் (டிஜிஎம்) பகிர்ந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கத்துக்கான ஜிஎஸ்ஐ-யின் ஆய்வுப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதன் முடிவுகளும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை.
52, 806.25 டன் தாது வளங்களை ஜிஎஸ்ஐ கணக்கிட்டுள்ளது. மொத்த வளமான 52,806.25 டன் தாதுக்களில் இருந்து ஏறத்தாழ 160 கிலோ தங்கத்தைதான் பிரித்தெடுக்க முடியும். ஊடகங்களில் குறிப்பிட்டதன்படி 3,350 டன் தங்கத்தை பிரித்தெடுக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.