திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
1 min read
Shivanthi Adityanar Mani Mandapam; Edapady Palanisamy opened
22/2/2020
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சிவந்தி ஆதித்தனார்
பத்திரிகை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்தவர் பா.சிவந்திஆதித்தனார். இவருக்கு தொழில் அதிபர் என்பதால் மட்டும் பெருமை அல்ல. நாட்டுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கல்வி, விளையாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது.
அதையும் மிஞ்சியது ஆன்மிகப்பணி. இன்று தென்காசி கோபுரம் உயர்ந்து நிற்கிறது என்றால் இவரது முயற்சிதான். பராக்கிரம பாண்டியன் கட்டிய இந்த கோவில் கோபுரம் இடி-மின்னலால் இடிந்து விட்டது. இதை முன்னமே பராக்கிரம பாண்டியன் உணர்ந்திருந்தானோ என்னவோ இந்த கோவில் சிதைந்தால் அதை சீர் செய்பவர் காலில் நான் விழுவேன் என்று எழுதி வைத்திருந்தான்.
அந்த புண்ணியத்தை பெற்றவர் சிவந்தி ஆதித்தனார்.
மணி மண்டபம்
அவருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது .
பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து விழா நடைபெறும் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்திற்கு கார் மூலம் வந்தார். அவரையும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
திறந்து வைத்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கபட்டு இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த நூலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் விழா நடந்தது.