நின்றிருந்த லாரி மீது மோதி எஸ்.ஐ. பலி
1 min read24.2.2020
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள அத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பு மகன் சிவசுப்பிரமணியம். இவர், தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் சக்திஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. சுப்புலட்சுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் சிவசுப்பிரமணியம் 23ம் தேதி இரவு மேலக்கரந்தை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 10.45 மணியளவில் அச்சங்குளம் கிராமத்தில் அந்தோணி முருகன் என்பவரை சிலர் வெட்ட வருவதாக கிடைத்த போன் தகவலின்பேரில் சிவசுப்பிரமணியம் தனது பைக்கில் அங்கு சென்று கொண்டிருந்தார்.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை கிராமம் பகுதியில் சென்றபோது அங்கு ஏற்கனவே பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிவசுப்பிரமணியம் ஓட்டிச் சென்ற பைக் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் மாசார்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று சிவசுப்பிரமணியம் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம், சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.