நடத்தை சரியில்லை என கூறியதால் பெண் தற்கொலை – குறி சொன்ன சாமியாடி கைது
1 min readகேரள மாநிலம் திருச்சூர் அருகே அண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோப். இவரது மனைவி ஷியாம்பதி (32). இவர்களது குடும்ப கோயில் வீட்டின் அருகே உள்ளது. ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். விழாவின் போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாமியாடுவார். அப்போது அனைவருக்கும் அவர் குறி சொல்வதுண்டு. இந்த ஆண்டுக்கான விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (25) சாமியாடினார்.
இதையடுத்து அவரிடம் குறி கேட்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷியாம்பதி குடும்பத்துடன் சென்றார். அப்போது சாமியாடி ஸ்ரீகாந்த் , உன் நடத்தை சரியில்லை. எனவே தேவியின் முன்னிலையில் நீ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார். பலரது முன்னிலையில் நடத்தை சரியில்லை என்று சாமியாடி கூறியதால் ஷியாம்பதி கடும் மன வேதனை அடைந்தார்.
அதைத் தொடர்ந்து வீடு திரும்பியவர் மன அழுத்தத்தால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோப் அண்டிக்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் உறவினர்கள் உள்பட பலரது முன்னிலையில் நடத்தை சரியில்லை என்று சாமியாடி ஸ்ரீகாந்த் கூறியதால் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு தூண்டிய சாமியாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து போலீசார் சாமியாடி ஸ்ரீகாந்தை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் சாமியாடி ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.