பாலியல் புகாரில் சிக்கிய நெல்லை பல்கலை. உதவி பேராசிரியர் மீது வழக்கு
1 min read5/3/2020
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் வரலாற்றுத்துறையில் பணியாற்றிய உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் கடந்த 2015ம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து பல்கலைக்கழக குழு நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உதவி பேராசிரியர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது இரண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடும் எச்சரிக்கைக்கு பின் அவர் மீண்டும் பல்கலை., பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வி நிறுவனத்தில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் போர்க்கொடி துாக்கினர். இதனால் உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் பல்கலை., சார்ந்த கல்லூரியில் மாற்று பணியிடத்தில் அமர்த்தப்பட்டார்.
இதனிடையே பல்கலைக்கழக மாணவி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், பாலியல் புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் மீது பல்கலை., நிர்வாகம் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும். பல்கலைக்கழகம் நடத்திய விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் நெல்லை பல்கலை.,யில் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி பேராசிரியர் மீது நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 509 (4)ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.