சிவகிரியில் புதுமாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை -மைத்துனரே தீர்த்துக் கட்டினார்
1 min read5/3/2020
தென்காசி மாவட்டம், சிவகிரி, தென்மலை இந்திரா காலனியைச் சேர்ந்த விவசாயி முருகன்- பஞ்சவர்ணம் தம்பதி மகன் முனியப்பன் (27). ஜேசிபி டிரைவர். இவருக்கும், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நாளை காலை சிவகிரி, தென்மலையில் திருமணம் நடப்பதாக இருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் கடந்த ஒரு மாதமாக செய்து வந்தனர். இதற்காக மணமகன் முனியப்பனின் தங்கை முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பே மதுரை மாவட்டம், பேரையூரிலிரந்து வந்திருந்தார். வீடு மற்றும் மண்டபத்தில் பந்தல், சமையல், அலங்கார ஏற்பாடுகளை செய்து விட்டு மணமகன் முனியப்பன் இந்திரா காலனியில் உள்ள தனது வீட்டில் ஒரு அறையில் இரவு 12 மணி அளவில் தூங்கச் சென்றார். அதன் அருகே உள்ள மற்றொரு அறையில் தாய் பஞ்சவர்ணம் (51), தங்கை முனீஸ்வரி (24) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென்று முனியப்பனின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த தங்கை முனீஸ்வரியும், தாய் பஞ்வர்ணமும் பதற்றம் அடைந்து ஓடி வந்தனர். அப்போது ஒருவர் கையில் அரிவாளுடன் அறையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த முனியப்பனை பார்த்து கதறியழுத தாயும், தங்கையும் உறவினர்களை எழுப்பி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல வந்த மருத்துவ உதவியாளர்கள் முனியப்பனின் உடலை பரிசோதித்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளியின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் கொலை நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் வரை ஓடி படுத்துக் கொண்டது.
இதையடுத்து டிஎஸ்பி சக்திவேல், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கிருந்த உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் மணமகனின் தங்கை முனீஸ்வரியின் கணவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கிலிமுருகன் (28) என்பவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதோடு, மைத்துனர் இறந்து விட்டாரே என கதறியழுததில் ஒரு வித செயற்கைத் தனம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவரை தனியறைக்கு கூட்டிச் சென்று போலீசுக்கே உரிய கவனிப்பை காட்டியதும் அவர் மாப்பிள்ளை முனியப்பனை கழுத்து அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அவர் கூறுகையில், ‘‘ எனக்கும், முனியப்பனின் தங்கை முனீஸ்வரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. எனக்கு அடிக்கடி மது மற்றும் கஞ்சா புகைக்கும் உண்டு. இதனால் எனது மாப்பிள்ளை முனியப்பன் மற்றும் மாமனார், மாமியார் என்னை மதிப்பதே இல்லை. தங்கையின் கணவராகிய எனக்கு அழைப்புச் சுருள் வைத்து திருமணத்திற்கு அழைக்க வேண்டும். அந்த முதல் மரியாதையை எனக்கு செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்து அறுத்து கொலை செய்தேன்’’ என்று கூறியுள்ளார்.
சிவகிரி தென்மலையில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் சொந்த மைத்துனராலேயே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.