மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பள்ளித் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
1 min read5.3.2020
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி (51). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியில் சென்று தலைமை ஆசிரியருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
சம்பவம் பற்றி அறிந்த பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் ஜான் கென்னடியை அந்த பள்ளியிலிருந்து அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றியது. ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தற்போதுள்ள தலைமையாசிரியரே போதும், புதிய தலைமையாசிரியர் வேண்டாம் என போராட்டம் நடத்தியதன் காரணமாக ஜான் கென்னடி அங்கும் பணியில் சேர முடியாத நிலை உருவானது.
சம்பவம் நடந்து 5 மாதங்களை கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பள்ளி மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் மாணவிகளிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஜான்கென்னடி பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த போது பாலியல் தொந்தரவு அளித்தாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் மகளிர் போலீசார், ஜான் கென்னடியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.