புகார் கொடுத்தவருக்கு பளார் விட்ட பெண் போலீஸ் ஏட்டு
1 min read5.3.2020
கோவை புறநகர் பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் ஏட்டு பணிபுரிகிறார். இவர், புகார் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும், சட்டையை பிடித்து இழுத்து அடிப்பதாகவும் புகார் வெளியாகியுள்ளது. சமீபத்தில்கூட ஒரு வாலிபர் சட்டையை பிடித்து பளார் என அறை விட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிலர், கோவை எஸ்.பி. சுஜித்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன் விவரம்:
கடவுள் பெயர் கொண்ட ஒரு பெண் தலைமை காவலர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், புகார்தாரர்கள் அனைவரிடமும் லஞ்சம் வாங்குகிறார். இவருக்கு பணம் தரவில்லை என்றால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் என்ன செய்யவேண்டும் என்பதை இவரே முடிவு செய்கிறார். இரவு 7 மணிக்கு மேலாகத்தான் புகார் மனுவை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இவரும், இக்காவல்நிலைய இன்ஸ்பெக்டரும் கைகோர்த்துக்கொண்டு, லஞ்ச பணம் குவிக்கின்றனர். லஞ்சம் கொடுக்க மறுக்கும் புகார்தாரரை, மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். காவல் நிலையத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் அனைவரிடமும் சண்டை போடுகின்றார். புகார்தாரரை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அராஜம் செய்கிறார்.
ஏற்கனவே இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வடவள்ளி காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று, பணி மாறுதலில் செல்லாமல் பேரூர் மகளிர் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார். யாராவது தட்டிக்கேட்டால், மேலதிகாரிகளுக்கு காசு கொடுத்து அனைத்து காரியங்களும் சாதித்து விடுவேன் என்கிறார். என்னை யாராலும் டிரான்ஸ்பர் செய்ய முடியாது என்கிறார். புகார் மனு அளிக்க வரும் மக்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்ளும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த புகார் மனு மீது விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.