திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் தேரோட்டம்
1 min read
Car Festivel at Thiruchendur Subramanya Samy Temple
8/3/2020
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
அறுபடை வீடுகளில் 2-வது படைவீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறும். இதில் மாசித் திருவிழா முக்கியமானதாகும்.
இந்த ஆண்டு மாசித் திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 28 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 7-ம் நாள் சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு பட்டு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 -ம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மாலையில் சுவாமி பச்சை சாத்தி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்சியான தேரோட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளினார். அதன்பின் தேரோட்டம் தொடங்கியது.
தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.