June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தலையணை வைத்து தூங்குவது நல்லதா?

1 min read
Is it better to sleep with a pillow?

‘தலையணை’ வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது.

தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ… அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகி யிருக்கிறது.

இதுவும்கூட ராஜாக்கள், பணக்காரர்கள் என்று மட்டுமேதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான, வண்ண வண்ணமான தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன.

நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும். அதேபோல படுக்கும்போது எக்காரணம் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்து சமமான தரையில் உறங்க வேண்டும்.

தலையணையால் என்ன பிரச்சினை?

உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.

இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது; கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.

உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபடலாம். இதனால் உறக்கம் கெடலாம்.

குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், ‘வெர்டிகோ’ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. பஞ்சு மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும். பின் அங்கே உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு தொடங்கி பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும்.

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடினமான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும். தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.

ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைகள் தொடங்கி, வளரும் குழந்தைகள் என யாருக்கும் தலையணை வைத்து பழக்கப்படுத்த வேண்டாம். அதனால், இளம் பிஞ்சுகளின் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, தலையணை வைத்து தூங்குவது நல்லதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *