எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: முக்கிய ரெயில்களின் சேவையில் மாற்றம்
1 min read
Egmore Railway Station Redevelopment Work: Changes to Services of Key Trains
30.7.2026
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்தே புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்திற்கே வந்து சேரும். அதாவது, ஆகஸ்டு 5-ந் தேதி தஞ்சாவூரில் இருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 3.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11 மணிக்கு அங்கிருந்தே புறப்படும்.
இதேபோல், மங்களூரு சென்டிரல் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.
மேலும், கொல்லம் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 8.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும். சேலம் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மேலும், திருச்சி – சென்னை இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை மாம்பலம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஆகஸ்டு 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 21-ந் தேதி வரை இந்த ரெயில் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல், அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரெயில் ஆகஸ்டு 6 மற்றும் 13-ந் தேதி ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆகஸ்டு 9 மற்றும் 16-ந் தேதிகளில் மீண்டும் அதே பாதை வழியாக திரும்பிச் செல்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.