June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் 43 இடங்களுக்கு சீல்

1 min read
43 places sealed in Chennai

7/4/2020

சென்னையில் 43 இடங்களுக்கு சீல் – பீனிக்ஸ் மாலில் 3,300 பேருக்கு #Corona தொற்று இல்லை!

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அதனால் தமிழக சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். சமூகப் பரவலைத் தடுக்க வீடு வீடாக ஊழியர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் குடியிருந்த 8 இடங்களுக்கு முதலில் சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. புதுப்பேட்டையில் 4 பேருக்குக் கொரோனா உறுதியானதால் அந்தப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. அதனால் அந்தப்பகுதி மக்களின் வசதிக்காகக் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. அந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் வராமலும் அந்தப் பகுதிக்குள் உள்ளே யாரும் செல்லாமலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வீடு வீடாக ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இன்று திருவொற்றியூர் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘சென்னையில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 3 வது நாளாக இன்று நடந்தது. இந்தப் பணியில் 16,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அதிகம் பரவும் இடங்களாக 43 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களுக்கு சீல் வைத்துள்ளோம். அதில் சுமார் 9 லட்சம் மக்கள் உள்ளனர். சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள கடையில் பணியாற்றியவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அந்த மால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று உறுதியான கடை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 3,300 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என்று ரிப்போர்ட் வந்துள்ளது. 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு அடிப்படையில் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவக்குழுவினர் அவர்களை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சளி, காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என ஊழியர்கள் கணக்கெடுத்து தினமும் ரிப்போர்ட்டைச் சமர்பித்துவருகின்றனர். அதன்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 30.6.2020-ம் தேதி வரை அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 1 -5 மண்டலங்களில்தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால்தான் அந்தப் பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குடியிருந்த வீடுகள், அவர்கள் வசித்த தெருக்களுக்கு சீல் வைத்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை போன் செய்தவுடன் வாங்கிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பரிசோதனை ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *