ரசிக்க வைக்கும் கழுகு
1 min read
ரசிக்க வைக்கும் கழுகு…
`கழுகு மாமிச பட்சினி… பிணம் தின்னும்… அதைப் பற்றிப் பேச, அதனிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது..?’ – எல்லோர் மனதிலும் தொக்கி நின்றது இந்தக் கேள்வி.
‘‘வெகு உயரத்தில் பறக்கும்.’’
‘‘மிகச் சரியாக இரையைக் கவ்வும்.’’
‘‘பெரிதாக இருக்கும்.’’
‘‘கரடுமுரடான பறவை…’’
‘‘உண்மைதான்… இதையெல்லாம் தாண்டி, கழுகு பல தனித்திறன்களைப் பெற்றிருக்கிறது. வெகு உயரத்தில் பறக்கிற கழுகு, மிகச் சரியாக பூமியில் இருக்கும் தன் இரையை அடையாளம் கண்டுகொண்டு அதிவேகத்தில் இறங்கி வந்து கொத்திக்கொண்டு பறக்கிறதல்லவா..? அதைப் பார்த்து வியந்திருக்கிறீர்களா? சிறிதும் களைப்பில்லாமல் ஆகாயத்தை அளக்கிற மாதிரி பறந்து திரிகிறதே… அந்தத் திறன் கழுகுக்கு எப்படி வந்தது?’’
“அதுதான் நியதி. ஆனால், கழுகு விஷயத்தில் அப்படியல்ல. கழுகின் திறன் என்பது சுயம்பு. எல்லா உயிரினங்களும் அதனதன் திறனோடு இயங்குகின்றன. அதனால்தான் அவை அவற்றின் எல்லையோடு வாழ்ந்து முடிந்துவிடுகின்றன. ஆனால், கழுகு, கடும் பயிற்சியால் தன் எல்லையை விரிவுபடுத்திக்கொள்கிறது. அதனால்தான் அது அனைத்துக்கும் உயரமாகப் பறந்து வானை ஆள்கிறது…’’
“பெண் கழுகு இருக்கிறதே, அது முட்டையிடும் பருவத்துக்கு வரும் காலத்தில் ஆண் கழுகு, ஒரு பாதுகாப்பான பாறையிடுக்கில், புல், இலை, தழைகளை எல்லாம்வைத்து பஞ்சு மெத்தைபோல ஒரு கூடு கட்டித்தரும். பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். ஆண் கழுகு, உணவு தேடி எடுத்து வந்து பெண் கழுகுக்கும் குஞ்சுகளுக்கும் ஊட்டி, அவ்வளவு பாதுகாப்பாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ளும். இந்த உபசரிப்பெல்லாம் குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரைக்கும்தான். லேசாக சிறகு வந்துவிட்டால், நிலைமை தலைகீழாக மாறிவிடும்…’’
“குஞ்சுகள், தங்கள் சிறகுகளை அசைக்கப் பழகியதும், பஞ்சு மாதிரி இருக்கிற கூட்டை ஆண் கழுகும், பெண் கழுகும் சேர்ந்து கலைத்துவிடும். குச்சிகளை அடுக்கி, தங்கள் இயல்புக்கேயான கரடுமுரடான கூட்டை அமைக்கும். அதில் தட்டுத் தடுமாறி குஞ்சுகள் தங்களுக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும்.’’
“ஒரு நல்ல நாளில் குஞ்சுகளுக்கான பயிற்சி தொடங்கும். குஞ்சை கூட்டில் இருந்து வலுக்கட்டாயமாக பெண் கழுகு தள்ளிவிடும். குஞ்சு மரணத்துக்கு நெருக்கமாகச் செல்லும். அந்தரத்தில் தன் சின்னச் சிறகுகளை அடித்து அடித்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துடிக்கும். ஆனால், அந்த சிறகசைவுகள் போதுமானதாக இருக்காது. கதறிக்கொண்டே அது கீழே விழ நேரும்போது ஆண் கழுகோ, பெண் கழுகோ பறந்து சென்று கால்பிடித்து கூட்டில் கொண்டு வந்து போடும். ஒரு நாள், இரு நாளில்லை… இந்தப் பயிற்சி அவ்வப்போது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஒருநாள், குஞ்சு தனக்கான சிறகை முழுமையாக அசைக்கத் தொடங்கிவிடும். வானம் வசப்பட்டுவிடும். உயரப்பறத்தல் பழகிவிடும். தன் குஞ்சு, அதன் சிறகால் பறப்பதைத் தாயும் தந்தையும் பெருமிதமாகப் பார்த்து ரசிக்கும்.’’
“இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எந்த உயிரினமும் திறனற்றுப் படைக்கப்படுவதில்லை. ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதற்கான திறன் அளந்துவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல உயிரினங்கள் அந்தத் திறனைக்கூடப் பயன்படுத்துவதில்லை. தான் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பிறந்தோம் இறந்தோம் எனத் தங்கள் ஆயுளை முடித்துக்கொள்கின்றன. ஆனால் கழுகைப்போல சில உயிரினங்கள், மனிதர்களும்தான், தங்கள் திறனைக் கடும் பயிற்சியால் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
உயரப் பறக்கலாம்….
அச்சம்தான் எல்லாத் தோல்விகளுக்கும் அடிப்படை. எது வந்தாலும் தாங்கிக்கொள்ளும் திறன் நமக்கு உண்டு. அந்த மனப்பக்குவத்தை நாம் பயிற்சியால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது நம்மால் முடியுமா என்று பார்க்காமல், இது நம்மால்தான் முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கைதான் கழுகை ஆகாயத்தில் வைத்திருக்கிறது…’’