இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் சிவாஜி படங்கள்
1 min read
Shivaji Ganesan Pictures Young People Want
25/4/2020
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது மட்டும்தான் தெரியும். ஒருவன் சிரிக்காமல் பொய் சொன்னால் “இவன் பெரிய சிவாஜி” என்ற சொல்லடைக்கு மட்டும் சிவாஜியை இளைஞர்கள் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் “கொடுத்த காசுக்கும் அதிகமாக நடிக்கிறாரே” என்று மிகை நடிப்பை நாசுக்காக சொல்லும் இளைஞர்களும் உண்டு.
பல்கலைக்கழகம்
ஆனால் சிவாஜி என்பது நடிப்பின் பல்கலைக்கழம் என்பதை இப்போது இளைஞர்கள் புரியத் தொடங்கிவிட்டார்கள். அது மட்டுமல்ல அவர் நடித்த சினிமா படங்கள் அனைத்து ஒரு வாழ்க்கை பாடம் என்பதையும் அறிந்து வருகிறார்கள். தேசிய தலைவர்கள், புராண இதிகாச நாயகர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியவர் சிவாஜி கணேசன் என்பதை இப்போது நேரடியாக அறிய தொங்கிவிட்டார்கள்.
டிவிக்களில் சிவாஜி படங்கள்
இதற்கு காரணம் கொரோனா ஊரடங்குதான். இதற்கு முன்பெல்லாம் அதிகமாக சிவாஜி படங்களை ராஜ் குரூப் டிவிக்களிலும் வசந்த் டிவியிலும்தான் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். மற்ற டிவிக்களில் மற்ற பழம்பெரும் நடிகர்கள் வரிசையில் சிவாஜியையும் கொண்டுவந்து எப்போதாவது அவர் நடித்த படங்களை போடுவார்கள்.
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ராஜ், வசந்த் டிவி்க்கள் மட்டுமின்றி எல்லா தமிழ் சேனல்களிலும் சிவாஜி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
குறிப்பாக சன் டிவியில்கூட பழைய படங்களை தேடி கண்டுபிடித்து ஒளிப்பரம் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் சிவாஜி படங்களே அதிகம். கடந்த வாரம் திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் போடப்பட்டன. அடுத்த வாரம் நகை சுவை படங்கள் வரிசையில் சிவாஜியின் பலே பாண்டியா, கலாட்டா கல்யாணம் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் சிவாஜியின் நகைசுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டானவை. பலே பாண்டியா படத்தில் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் வந்து கலக்கி இருப்பார். இதில் இந்த மூவரும் வயதாக பாத்திரங்கள் அ்ல்ல. ஆனாலும் ஒவ்வொன்றையும் தனிமைப்படுத்தி வித்தியாசம் காட்டியிருப்பார். ஒரு சிவாஜிக்கு ஜெயலலிதாவின் தாய் சந்தியா ஜோடியாக நடித்திருப்பார். நடிகவேள் எம்.ஆர்.ராதா இரண்டு வேடங்களில் அசத்தி இருப்பார். இந்தப்படம் மிக குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.
அதேபோல் கலாட்டா கல்யாணம் படமும் மிக சிறந்த நகைச்சுவை படமாகும். சிவாஜிக்காக சிறிய நாடகமாக எழுதப்பட்டது இக்கதை. பின்னர் சிவாஜியின் விருப்பத்தின் பேரில் சினிமாவாக எடுக்கப்பட்டது. இதேபோல் அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் காதலிக்க நேரமில்லை படமும் சிறந்த நகைச்சுவை படம்தான் நாகேஷின் நகை சொல்லும் பாங்கு இன்னும் பலரை ரசிக்க வைக்கும்.
சன் டிவி போல் ஜெயா டிவி, மெகா டிவி. கேப்டன் டிவி போன்றவற்றிலும் சிவாஜி படங்கள் அதிக அளவில் காட்டப்படுகின்றன.
ஒரே நாளில் 7 படங்கள்
இந்த ஊரடங்கு காலத்தில் மற்ற நடிகர்கள் படங்கள் ஒரளவு ஒளிபரப்பப்பட்டாலும் சிவாஜி கணேசன் படங்கள்தான் அதிக அளவில் கோலோச்சுகிறது. ஒரே நாளில் 5 முதல் 7 படங்கள் வரை காட்டப்பட்டு உள்ளன. திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, ஊட்டி வரை உறவு, நான் பெற்ற செல்வம், பாரத விலாஸ், பட்டிக்காடா பட்டணமா, பாசமலர், புதிய பறவை, முதல் மரியாதை, இருதுருவம், ஜல்லிக்கட்டு, கீழ்வானம் சிவக்கும், நீல வானம், போன்ற படங்கள் பலரின் இதங்களை வருடிச்சென்றுள்ளன.
தற்போது டிவியில் பொதுமக்கள் செய்தி கேட்க அதிகமாக ஆசைப்படுவது இல்லை. காரணம் எப்போதும் கொரோனா பற்றியும் சாவு பற்றியும்தான் செய்தி இருப்பதால் அது மக்களை பயம் கொள்ள வைக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பதையும் மற்றபடி தலைப்பு செய்திகளை மட்டுமே கேட்டுவிட்டு வேறு சேனலுக்கு திருப்பி விடுகிறார்கள்.
இதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சினிமா படங்கள்தான் ஓடுகிறது. அதுவும் அதிகமாக சிவாஜியின் சிம்மக் குரல் வசனத்தை கேட்ட முடிகிறது. சிவாஜி ரசிகர்களுக்கு எந்த படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஆனால் இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்து அதை முழுமையாக பார்த்து சிவாஜியின் நடிப்பை கண்டு வியக்கிறார்கள். அவர்களை புதிய உலகத்திற்கு கொண்டு சென்றுள்ளன அந்தப் படங்கள்.
சிவாஜி படங்கள் அதிக அளவில் ஒளிப்பரப்ப காரணம் அதை இன்றைய இளைஞர்கள் அதிகமாக பார்க்கத் தொடங்கிவிட்டதைத்தான் காட்டுகிறது. அதனால்தான் எல்லா டிவிக்களிலும் சிவாஜியின் படங்களை தேடி கண்டுபிடித்து ஒளிபரப்புகிறார்கள்.
தேசிய உணர்வு
சிவாஜி படங்கள் இன்றைய இளைஞர்களின் நெஞ்சங்களில் வலம் வரத் தொடங்கி உள்ளன.
சிவாஜியின் படங்கள் நடிப்புக்கு எடுத்துக் காட்டுவதோடு நின்று விடாது. தேசிய உணர்வை ஊட்டும், நம்மை பக்தியில் திளைக்க வைக்கும். சிவாஜி சில படங்களில் ஆண்டி ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படங்கள்கூட பார்ப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.
சுருக்கமாக சொல்லப்போனால் சிவாஜி கணேசன் திரை உலகில் பெரும்புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். அதுபற்றி எழுத ஒரு புத்தகம் போதாது.
· -மணி ராஜ்